06.09.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி
இந்தப் பதிவு பின்வரும் 03 விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாரி மழையின் தொடக்கம்
2. தீவிரமடையும் எல்நினோ
3. செப்டம்பரின் இரண்டாவது வாரத்திலிருந்து செறிவடையும் வெப்பச்சலன மழை
************************************************
1. மாரி மழையின் தொடக்கம் ( இரண்டாவது இடைப்பருவ மழை)
இவ்வருடத்தின் இரண்டாவது இடைப்பருவ மழை( மாரி மழை) ஒக்டோபர் 14-19ம் திகதிக்கிடையில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் தற்போது இரண்டாவது இடைப்பருவம் செயற்பாட்டில் இல்லை. இலங்கையின் தற்போது பயன்பாட்டில் உள்ள காலநிலைப் பருவங்கள்( 1. வடகீழ்ப்பருவம் 2. முதலாவது இடைப்பருவம் 3. தென்மேற்குப் பருவம் 4 இரண்டாவது இடைப்பருவம்) மீள் வகைப்பாடு செய்யப்படவேண்டும்.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலபோக நெற்செய்கையைத் தீர்மானித்த பிரதான காரணி இந்த ஒக்டோபர் மாத மழையே.
ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தாழமுக்க/ புயல்களின் செயற்பாட்டினால் சராசரியை விட அதிக மழை குறைந்த மழை நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் வெள்ள மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் இவ்வருடமும் பாதிக்கப்படும்.
முன்னரே குறிப்பிட்டபடி இம்முறை ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 03 புயல்களோடு கூடிய 07 தாழமுக்க நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.
ஆகவே இம்முறையும் ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலும், நவம்பர் மாதத்தின் நடு மற்றும் இறுதிப் பகுதியிலும், டிசம்பர் மாதத்தின் முற்பகுதியிலும் வெள்ள அனர்த்த நிகழ்வுகளுக்கான வாய்ப்புக்கள் உண்டு. இவையனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தாது விட்டாலும் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
மிகக் குறிப்பாக கூறுவதானால் நவம்பர் மாதம் 10ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரையான காலப்பகுதியில் நிகழவிருக்கும் தாழமுக்கங்கள(குறைந்தது 03)/ புயல்(குறைந்தது 01) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
************************************************
2. எல்நினோவின் தீவிரம்
எல்நினோ மிகத் தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. நினோ பிராந்தியம் 1+2 இல் வெப்பநிலை இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 4.1 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. அதேவேளை நினோ பிராந்தியம் 3.4 இல் வெப்பநிலை 2.6 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வலுப்பெற்றுள்ளது.
இந்து சமுத்திர இருமுனை இன்னமும் நடுத்தர நிலையிலேயே உள்ளது. இன்றைய தினம் (06.09.2026) இந்து சமுத்திரத்தின் மேற்கு பிராந்தியத்தில் (அரபிக்கடலில்) 0.25 என்ற அளவிலும் கிழக்கு பிராந்தியத்தில் ( வங்காள விரிகுடாவில்) 0.22 என்ற அளவிலுமே உள்ளது.
ஆனால் இந்து சமுத்திர இருமுனை தொடர்ந்தும் வலுப்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எல்நினோ இலங்கையின்2026/2027 மழைவீழ்ச்சிப் பாங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த எல்நினோ, இலங்கை முழுவதும் பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது நாட்டின் வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் நிலவும் வரண்ட வானிலையினால் ஏற்படும் பாதிப்புக்கள் மேலும் தீவிரம் பெறும். ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை கிடைத்தாலும் அவை நிலவும் வரண்ட வானிலைப் பாதிப்புக்களை எதிர்பார்க்கும் அளவுக்கு தணிக்காது.
இந்த எல்நினோவின் பாதிப்புக்கள் இலங்கையில் வரட்சியை விட வெள்ள நிகழ்வுகளினாலே அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். குறிப்பாக எல்நினோவின் காரணமாக அதிக தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகும் வாய்ப்புள்ளதனாலும் அவற்றில் சிலவற்றின் நகர்வுப் பாதைகள் கிழக்கு கரையோரமாகவே அமையும் என்பதனாலும், குறைந்த மழை நாட்களில் அதிக அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனாலும் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புக்குரிய மலையக உறவுகளே !... இம்முறையும் தாழமுக்க/ புயல் நிகழ்வுகள் உருவாகும் வாய்ப்புள்ளன. பல தாழமுக்கங்கள்/ புயல்களின் நகர்வும் பாதைகள் இலங்கைக்கு கிழக்காகவும் தெற்காககவும் நகரும் வாய்ப்புள்ளதாக மாதிரிகள் காட்டுகின்றன. போதாத குறைக்கு மிக வலுவான எல்நினோவும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உச்சமடையவுள்ளது. அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மழை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆகவே நாளுக்குரிய மழைச் செறிவு கூடுதலாக இருக்கும். ஆகவே இம்முறையும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெள்ள நிகழ்வோடு கூடிய நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கேற்ற வகையில் உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.
************************************************
3. செறிவடையும் வெப்பச்சலன மழை
எதிர்வரும் 14.09.2026 க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலன மழை செறிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இந்த மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளிலும் மழை கிடைக்காது. அதேவேளை அனைத்துப் பகுதிகளும் இந்த வெப்பச் சலன மழையைப் பெறாது. அதேவேளை இந்த வெப்பச்சலன மழையின்போது இடி மின்னல் நிகழ்வுகள் இடம்பெறக்கூடும்.
செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வெப்பச்சலன மழையோடு ஒரு தாழமுக்க நிகழ்வும் மழையைத் தரும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் விவசாயிகள் காலபோக நெற்செய்கைக் காலத்தைத் தீர்மானிக்கலாம். விவசாய மற்றும் கமநலத் திணைக்களத்தினர் இது தொடர்பாக விவாசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- நாகமுத்து பிரதீபராஜா -
Scroll To Top